புதன், 18 மே, 2011

பிரியம்...


இருண்டதோர் மழைப்பொழுதில் என் இதழ் தீண்டி,
உருகிக் கரைந்திட்டதோர் மழைமுத்திடம்,
நான் என்பதே மறந்து நீ மட்டுமாய்,
நிறைந்து நெகிழ்ந்திடும் என் நினைவுகளிடம்,
அருகே நீயிருப்பதாய் பாவித்து அலைபேசியில் உன் முகம் பார்த்து
அடிக்கடி பேசிக்கொள்ளும் என் பைத்தியக் கணங்களிடம்,
உனக்கொன்று என்றால் பதறித் துடித்து நான்,
உடனடியாய் சரணாகும் என் மாடத்து தெய்வங்களிடம்,
உன்னை உயர்விருத்தி என்னைப் புறக்கணிப்பதால்,
முறைத்து முகம் திருப்பும் என் இதயத்திடம்,
செல்லமாய் உன்னை முத்தமிடும் போது,
சிலிர்த்துக் கொள்ளும் என் வீட்டுச் சுவர்களிடம்,   
அநேக இரவுகளில் என் அணைப்பிலேயே கிடந்து,
சில பொழுதுகளில் கண்ணோரம் கரிக்கும் உப்புநீரில்,
கன்னம் நனைந்துகொள்ளும் என் கரடி பொம்மையிடம்,
கேட்கப் பொழுதிருந்து பிரியமும் இருந்தால்,
கேட்டுப் பார் உன் மீதான என் பிரியத்தினை...

வியாழன், 17 மார்ச், 2011

துளி ரசிக்கத் துடிக்கும் மனதும்...


ஓர் மழைப்பொழுதின் இனிமையில்,
 துளி ரசிக்கத் துடிக்கும் மனதும்,
உயிர் சிலிர்த்து உறையும் உடலும்,
அள்ளி அள்ளிப் பருகியும் கூட அலுக்காத அழகுகள்,
ஆயிரமாயிரமாய்க் கொட்டிக் கிடந்தும்,
அகத்தில் நிறைந்து கிடப்பதென்னவோ 
அற்பக் கவலைகளும் அடங்காத ஆசைகளுமே,
தேவைகள் தாண்டி ஏக்கங்கள் கடந்து, 
உயிர் உருகி உடல் கரைந்து,
மழை பருகி சுகம் நிறையும் இனிதான பொழுதுகள்..

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நேசம் !!!!


எங்கு தொடங்கியது உன் மீதான என் நேசம்?
எப்போது உன் தேடல்களும் என் தேடல்களும் ஒரே புள்ளியில் சந்தித்தன?
நான் உணர்வதையே நீயும் நீ நினைப்பதையே நானுமாக எப்போது இரு மனங்களும் ஒன்றாயின?
புழுதி படிந்த கல்லாயிருந்த என்னை பட்டை தீட்டிய வைரமாய் ஒளிரச் செய்தவன் நீ.
என் அவநம்பிக்கைகளை எல்லாம் நம்பிக்கைகளாக மாற்றியவன் நீ,
பாலைவனங்கள் மட்டுமே என் பாதையில் இருக்கும் எனச் சோர்ந்து போயிருந்தவளுக்கு,
சோலைகளும் எதிர்ப்படும் என்பதைச் சொல்லித் தந்தவன் நீ,
உன்னால் என் சஹாராக்களில் நீரூற்றுகள் சுரந்தன.
எரிமலையாய்க் கனன்று கொண்டிருந்த மனது ஓடை நீராய்க் குளிர்ந்தது.
அன்புக்கு சாதிக்கும் சக்தி அதிகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இனிக் கடலும் தாண்டுவேன் நீ கரம் கோர்த்தால்.
பாலையிலும் பாதம் குளிர நடப்பேன் உன் துணை இருப்பதால்.
நெடுஞ்சாலைகளும் நீளம் குறைந்து போகும் உன் நினைவுகளோடு நான் நடந்தால்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

காதல் !!!


காதல்! இந்த மந்திர வார்த்தை உச்சரிக்கப்படாத உதடுகளே இல்லை.காதல் நுழையாத இதயங்களும் இல்லை.யாராயிருப்பினும் வாழ்நாளில் ஒருமுறையேனும் காதல்வசப்படாமல் இருக்கவே முடியாது.காதல் என்ற பெயரில் நாளாந்தம் நிறையத் தப்புகள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து ஆரோக்கியமான காதல் வாழ்விற்கு சில வழிமுறைகள்.(சொந்த அனுபவம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ) நீங்கள் இன்னும் வாழ்நாள் பந்தத்தில் இணையாத ஜோடியாக இருக்கலாம், அல்லது அம்மி மிதித்து அட்சதை தூவி ஆசீர்வாதம் பெற்று இல்லறம் நடத்தும் ஜோடியாக இருக்கலாம்.எப்படியிருப்பினும் காதற்பயிர் தளைக்க சில குறிப்புகள்.

  1.  நம்பிக்கை காதலின் அடிப்படை. பரஸ்பரம் நம்பிக்கை கொண்டிருங்கள். இல்லாவிடில் காதலின் அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.
  2.  புரிதல் இல்லாத வாழ்வு பிரிதலில் தான் போய் முடியும். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையின் விருப்பு, வெறுப்புக்களைப் புரிந்து வைத்திருங்கள்.
  3. நடந்து முடிந்த விடயங்களையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிராதீர்கள். தவறு யார் செய்திருந்தாலும் நாளடைவில் மன்னித்து மறந்து விடுங்கள்.மறப்பது மனித குணம். மன்னிப்பது தெய்வகுணம் என்பார்கள். தெய்வமாக இருப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் போகுமா என்ன? மன்னிப்பு வழங்க ஒரு போதும் தயங்காதீர்கள்.
  4. உங்கள் துணையை ஒருபோதும் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அது அவர்களைக் காயப்படுத்தும். மாறாக அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளை மெச்சுங்கள்.
  5. பாராட்டு வழங்கத் தயங்காதீர்கள். உங்கள் துணையிடம் இருக்கும் திறைமைகளைக் கண்டறிந்து பாராட்டுங்கள். ஊக்குவியுங்கள்.(எனக்கு மிகப் பொருந்தும்) உதாரணமாக சாப்பாட்டில் உப்பில்லை என்றால் உடனே எரிந்து விழுவீர்களே அதே போல சமையல் நன்றாயிருந்தால் உடனே பாராட்டுங்கள்.
  6. அவ்வப்போது சின்னச் சின்ன ஆச்சரியங்களை வழங்குங்கள். வாழ்த்து அட்டை, உங்கள் துணைக்குப் பிடித்த சில பொருட்களை பரிசாக வழங்குங்கள். விசேட நாட்களில் மட்டுமல்ல, உங்களால் முடிந்த போதெல்லாம்.
  7. செலவேயில்லாத சிக்கனமான பரிசு அன்பான வார்த்தைகள். அன்பை எப்போதும் வார்த்தைகளாக வெளிப்படுத்துங்கள்.
  8. நகைச்சுவை, விளையாட்டுப்பேச்சு எல்லாமே தேவை தான், ஆனால் உங்கள் துணையின் மனதைப் புண்படுத்தாதவாறு பேசுங்கள்.
  9. துணையிடம் எப்போதும் மரியாதை கொண்டிருங்கள். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் அளவுக்கு மீறித் தலையிடாதீர்கள்.
  10. உங்கள் பாசத்தையும் அருகாமையையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். தேவைப்படும் பட்சத்தில் உதவி செய்யத் தயங்காதீர்கள்.
  11. முடியாத தருணங்களில் வாக்குறுதிகளை வழங்காதீர்கள், முடியாதென்பதற்கு காரணத்தை விளக்குங்கள். உறுதி வழங்கிவிட்டு செய்யாதிருப்பதை விட முடியாதேன்பதைச் சொல்லி விடுவதே மேல்.
  12. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் துணையைக் காதலியுங்கள். காதலைக் காதலியுங்கள். காதலை வாழ வையுங்கள். காதல் உங்களையும் வாழ வைக்கும்.




வியாழன், 17 பிப்ரவரி, 2011

காதலனுக்காய்...


காலையிலிருந்தே கதவுக்கும் கண்ணாடிக்குமாய்
அலைகின்றன அவள் கால்கள்,
மாலை வரப்போகும் பின்னாளில் மாலை தரப்போகும்
அவள் மன்னவனுக்காய்
இங்கு வைத்ததை அங்கும் அங்கு வைத்ததை இங்குமாய்,
அரக்கப் பரக்க ஏதோ செய்துகொண்டிருந்தன கைகள்,
மனம் மட்டும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த 
அவன் முகத்தையே அசை போட்டுக் கொண்டிருந்தது .
கனவுகள் சுமந்த கண்கள் இரண்டும் மின்மினிகளாய்,
இமைப்பறவைகள் சிறகடிக்கப் பளபளத்தன,
வருமவள் காதலனுக்காய் அவளோடு சேர்ந்து,
காத்திருக்கிறது ஓர் பூச்செண்டும்!!!

புதன், 16 பிப்ரவரி, 2011

'புலத்தின் பொழுதுகள்' பாகம் 02

சொந்தமாய் ஒரு வீடு என்பது அநேகரின் கனவாக இருக்கின்றது. ஆனால் நான் வாழும் நாட்டில்(சுவிட்சர்லாந்து) நம் நாட்டைப் போல அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதோடு சொந்த வீடு என்பது இந்நாட்டவர்கள் பலராலேயே விரும்பப்படுவதில்லை. அவர்கள் இந்நாட்டின் சட்ட நுணுக்கங்களையும் நெளிவு சுளிவுகளையும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். சாதாரணமாக ஒரு வீடு வாங்க விரும்பினால் அந்த வீட்டின் பெறுமதியில் 20 சதவீதத்தை முதலிலேயே செலுத்தி மிகுதியைத்  தவணை அடிப்படையில் செலுத்திக் கொள்ள வேண்டும். அவற்றைச் செலுத்தி முடியவே நீண்ட காலம் எடுக்கும் என்பதோடு செலுத்தி முடிந்த பின் நம் பெயரில் உள்ள ஒரு சொத்தாக அது மாறுவதனால் அதன் மீதான வரியையும் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் வீடு வாங்கும் இந்த நாட்டவர்கள் தவணைப்பணம் கட்டி முடியும் தருவாயில் அந்த வீட்டின் பெயரில் கடன் எடுத்து விடுகிறார்கள். எனவே முழுப்பணமும் செலுத்தி முடியும் வரையில் சொந்த வீடு என்று கூடச் சொல்லிக்கொள்ள முடியாத நிலை தான். நம்மவர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக வீடு வாங்கும் மோகம் அதிகரித்திருக்கின்றது. ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் விடயங்களை முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவர் வாங்கினால் நானும் வாங்குவேன் என்றதொரு போட்டி மனப்பான்மையில் தான் நிறையப்பேர் வாங்குகின்றார்கள். இடையில் பணம் செலுத்த முடியாத நிலை வரும் போது நிறைய நட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. அத்துடன் நாம் வாடகை வீட்டில் இருக்கும் போது வசதிப்படும் நேரத்தில் வேறு வீட்டிற்கு மாறிக்கொள்ளலாம். சொந்த வீடு எனும்போது அது அவ்வளவு இலகுவாக இருக்காது. எனவே எந்த விடயத்திலும் ஒரு தடவைக்குப் பத்துத் தடவை யோசித்து சரியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு முடிவெடுத்தல் என்பதே சரியாக இருக்கும்.

'புலத்தின் பொழுதுகள்' பாகம் 01


மாறுபட்டிருத்தல், வேறுபட்டிருத்தல் அல்லது விதிவிலக்காய் இருத்தல் என்பது சுலபமான காரியமாகப் படவில்லை எனக்கு. மரபு வழி வந்த விடயங்களையும் காரணம் தெரியாமலே இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகளையும் விட்டு வெளியே வருதல் என்பது இலகுவில் சாத்தியப்படாததொன்றாகவே நான் உட்பட நம்மில் பலருக்கும் இருக்கின்றது. இவற்றில் நம் முன்னோர்களால் வழி வழியாகக் கூறப்பட்டு வருகின்ற சில விடயங்கள் இன்றைய சூழலில் பொருந்தாது போகுமிடத்து அவர்களை அனுசரிக்க வேண்டும் என்பதற்காகவே விருப்பமின்றி நிறைய இடங்களில் தலையாட்ட வேண்டியும் இருக்கின்றது. பொழுது இருண்டு விட்டால் வீட்டை விட்டுப் பெண்கள் வெளியே போகக் கூடாதென்பது முன்னோர் வழக்கம். நாம் இப்போதிருக்கின்ற சூழலில் அதெல்லாம் பார்த்தால் முடியுமா? இரவோ பகலோ பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இப்போது அநேகமானோருக்கு இருக்கின்றது.சரியோ தவறோ விரும்பியோ விரும்பாமலோ சொந்த ஊரையும் சொந்தங்களையும் விட்டு தூரம் வந்த பின்னர் இருக்கும் சூழலில் பொருந்தி வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது. ஊரிலிருக்கும் போது நம் கலாச்சாரப்படி அணிந்த உடைகளை ஐரோப்பாவின் குளிர் காலநிலையில் அணியமுடியுமா? இங்கிருக்கும் காலநிலைகேற்றவாறு தான் இங்கு உடை அணிய முடியும். என்னைக் கேட்டால் அந்தந்த இடத்தின் காலநிலைகளைப் பொறுத்துத் தான் கலாச்சாரமும் உடைகளும் அமைந்திருக்கின்றன என்று சொல்வேன். சமீபத்தில் நான் வாழும் நாட்டில் உறவினர் ஒருவரின் வீட்டு விசேடம் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.அங்கே  நான் சந்தித்த ஒரு இளம்பெண் என்னிடம் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ' அக்கா உங்களுக்குத் தெரியுமா? ஐரோப்பாவில் தமிழ்ப் பெற்றோருக்குக் குழந்தைகளாக நாங்கள் பிறந்து எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றோம் என்று? மேற்கத்தைய கலாச்சாரத்தையும் பின்பற்ற முடியாமல் நம்மவர் கலாச்சாரத்தையும் பின்பற்ற முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்புகளாய் நாங்கள் தவிப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரிகிறது?' அவளின் கேள்வியில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. அவர்கள் படிக்கும் இடங்களிலோ வேலைக்குப் போகும் இடங்களிலோ மேற்கத்தையக் கலாச்சாரத்தையும் நம்மவர் கூடுமிடங்களில் நம் கலாச்சாரத்தையும் பின்பற்றவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கின்றது. இல்லாதவிடத்து நாகரிகம் தெரியாதவர்கள் என்று இந்த நாட்டவர்களாலும் தறுதலைகள் என்று நம்மவர்களாலும் கேலிகளுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகின்றார்கள் பிள்ளைகள்.எனவே அவர்களுக்குச் சரியான இடத்தில் சரியான அணுகுமுறைகளைக் கற்றுக் கொடுப்பதும், பிள்ளைகளைப் புரிந்துகொண்டு சரியாக வழிகாட்டுவதென்பதும் இங்குள்ள பெற்றோர்களின் கடமையாகவும் ஏன் ஒரு சவாலாகவும் கூட இருக்கின்றது.