வியாழன், 27 ஜனவரி, 2011

?????????????


நடந்து கொண்டேயிருக்கிறது ஓர் போட்டி,
அறிவுக்கும் உணர்வுகளுக்கும்,
இதயத்தின் தட்டுத் தாழ,
மூளையின் நிலைமை பரிதாபகரமாய்,
சரியென்று மூளை சொன்னாலும்,
இல்லையென்கிறது இதயம்,
இலகுவில் எதையும் உதறித் தள்ளவும் முடியாமல்,
எடுத்தணைத்து அனைத்தையுமே இன்புறவும் முடியாமல்,
பிசைந்து பிசைந்து குருதி பாய்ச்சுகின்றது இதயம்,
மடிந்து மடிந்து முடங்கிக் கொள்கின்றது மூளை!!!

வியாழன், 20 ஜனவரி, 2011

மீண்டுமோர் காத்திருப்பு!!!

காத்திருக்கின்றேன் அந்தப் பொழுதுகளுக்காய்,
அலுவலகம் விட்டு வீடு வரும் உன்னை,
அள்ளியெடுத்துப் பூசிக் கொள்வதற்காய்,
காலை முதல் மாலை வரை காத்திருந்து,
சேர்த்து வைத்த கதைகளெல்லாம்,
காதோரம் சொல்லிவிட்டு உன் கைவிரல்கள் சொடுக்கெடுத்து,
சூடாய் ஒரு தேநீர் சுடு நீரில் ஓர் குளியல்,
வாகாய் உன் மார்பில் பொருந்தி வக்கணையாய்க் கதை பேசி,
வறுத்த மீன் நீ ருசிக்க என் வயிற்றின் பசியடங்க,
குழந்தையாய் நீயுறங்க கண்விழித்தே நான் ரசிக்க,
விடிந்திடும் ஓர் பொழுதில் விருட்டென நீயணைக்க,
வெட்கியே நான் விலக விடாமல் நீ துரத்த,
சிரிப்புடன் விரைந்துமே நொடிகளும் கடந்துவிட,
அலுவலகம் செல்லுமுன்னை வழியனுப்பி விட்டு விட்டு,
கண்ணோரம் நீர் கரிக்க உன் கண் மறைவில் துடைத்துவிட்டு,
நீ திரும்பும் வேளைக்காய் மீண்டுமோர் காத்திருப்பு!!!